காசோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பணம்
செலுத்து வதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவிதான் செக்.
தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்துக்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம். இந்த காசோலையில் பல வகைகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்போது தெரிந்து கொள்வோமா?
காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள்!
ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும் (Drawee). காசோலையில் கொடுப்பவர், அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம் பெற வேண்டும்(Drawer). காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும் (Payee). எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். கண்டிப்பாக தேதி குறிப்பிட வேண்டும்.
இடத்தை மையப்படுத்தி காசோலைகளின் வகைகள்!
உள்ளூர் காசோலை (Local cheque): பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப் பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.
வெளியூர் காசோலை (Outstation cheque): ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படு கிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்து வதன் மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.
சம காசோலை (At Par cheque): இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மதிப்பின் அடிப்படையில் காசோலையின் வகைகள்!
சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque): ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.
உயர் மதிப்புடைய காசோலை கள் (High value cheque): ரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.
பரிசு காசோலைகள் (Gift Cheque): அன்புக்குரிய வர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.
பொதுவான நான்கு வகை காசோலைகள்!
கீறாக் காசோலை (Open cheque): வங்கியில் கவுன்டரி லேயே ஒரு காசோலையைக் கொடுத்து பணத்தைப் பெற முடிந்தால், அது கீறாக்காசோலை எனப்படும்.
ஒருவர் தனது சொந்தக் கணக்கில் இருந்து தானே பணத்தைப் பெறலாம். இல்லையெனில், வேறு யாரிடமாவது கையெழுத் திட்டு கொடுத்து பணத்தைப் பெற சொல்லலாம்.
கொணர்பவர் காசோலை (Bearer cheque): கொணர்பவர் காசோலை மூலம் ஒரு வங்கியில் காசோலை கொடுப்பவர் யாராயினும் பணத்தைப் பெற முடியும். இந்த காசோலையை ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வேறொரு வருக்குக் கொடுக்கலாம்.
ஆணைக் காசோலை (Order cheque): இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் காசோலையாகும். இத்தகைய காசோலையில் “bearer” என்ற வார்த்தை அடிக்கப்பட்டு ‘order’ என எழுதப்படலாம். பணம் பெறுபவர் (Payee), காசோலைக்குப் பின்புறத்தில் கையெழுத்திட்டு வேறொரு வருக்கு அதே காசோலையை மாற்றிவிடலாம்.
கோடிட்ட காசோலை (crossed cheque): கோடிட்ட காசோலையை கவுன்டரில் கொடுத்து பணத்தை பெற முடியாது. இத்தகைய காசோலை மூலம் வங்கி, பணம் பெறுபவர் கணக்கில் மட்டுமே பணத்தை வரவாக வைக்கும். ஒரு காசோலை யின் மேல் இடப் பக்கத்தில் 2 கோடுகள் வரையப் பட்டாலோ, ‘account payee’ என எழுதப் பட்டாலோ அது கோடிட்ட காசோலையாகக் கருதப்படும்.
பண உத்திரவாதம் அளிக்கும் காசோலைகள்!
சுய காசோலை (Self cheque): சுய காசோலை என்பது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தனக்குத் தானே வரைந்து கொள்ளும் காசோலையாகும். இவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் தானே சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார். இதற்கு மாற்றாக ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque): இந்த காசோலை, எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பின் தேதியிட்டு அளிக்கப்படும். காசோலையில் குறிப்பிடப் பட்டிருக்கும் தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை இது செல்லுபடி ஆகும்.
வங்கியாளரின் காசோலை (Banker’s cheque): வங்கி தனது சொந்த நிதியில் இருந்து வழங்கும் காசோலையாகும். இதற்கான பணம் இந்த காசோலையைக் கேட்பவரின் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். சாதாரண காசோலையைப் போல வங்கியாளரின் காசோலையை நிராகரித்து விட முடியாது.
பயணியின் காசோலை (Traveller’s cheque): ஒரு பயணி, வெளிநாட்டுப் பயணத்தின் போது பணத்துக்குப் பதிலாகக் கொண்டு செல்லக்கூடிய காசோலை. பயணியின் காசோலை ஒரு திறந்த வகை காசோலை. வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடியது. பயணியின் காசோலை உணவகங் களிலும், அனைத்து இடங்களிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பயணத் தின்போது, பயன்படுத்தாத காசோலைகளை மறுபயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.