செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.
செல்போன் டவரின் கதிர்வீச்சுகளால் சென்னைபோன்ற பெருநகரங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படவில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
செல்போன் டவர்களால் அப்படி என்ன ஆபத்து?
"வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு, செல் போன் டவரின் பவரைக் கூட்டிக்கொண்டே போகின்றன. ஏற்கெனவே குப்பை, தூசு போன்றவற்றால், மாசு அடைந்துள்ள காற்று, தற்போது இந்த டவர்களின் கதிர்வீச்சுகளால் மேலும் மோசமாகிவிட்டது. "இந்த கதிர்வீச்சுகளால் கேன்சர் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும்!" என்று சென்னை, டெல்லி, மும்பையைச் சேர்ந்த பலர் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். தன் வீட்டுக்கு அருகே செல்போன் டவர் அமைக்கக் கூடாது எனப் போராடும் டெல்லியைச் சேர்ந்த சோனியா சிங் என்பவர், அதனால் உண்டாகும் பாதிப்புகளை பெரிய பட்டியலாக கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்.
அரசு கணக்கெடுப்பின்படி சென்னையில் 2,500 செல்போன் டவர்கள் உள்ளனவாம். ஆனால், அதற்கும் அதிகமாகவே இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இவற்றை அமைக்க வீட்டு உரிமை யாளர்களைத் தவிர்த்து வேறு யாரிடமும் செல்போன் நிறுவனங்கள் அனுமதி வாங்குவதில்லை. தற்போதுதான், மாநகராட்சி இந்த செல்போன் டவர்களைக் கணக்கெடுத்து வரி விதித்து உள்ளது. அந்தக் கணக்கெடுப்பும் வரி வருவாய்க்குதானே தவிர, மக்கள் நன்மைக்காக அல்ல. செல்போன் டவர் அமைக்கும்போது, அதனுடன் ஜெனரேட்டர் அமைக்கிறார்கள். அவை வெளியிடும் புகை மற்றும் சத்தத்தினாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே அவர்களின் டவர்களில் குறிப்பிட்ட அளவு சிக்னல்களை வெளியிடுகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களோ, 'இந்தப் பகுதியில் சிக்னல் குறைவாக உள்ளது' என்று வாடிக்கையாளர் புகார் அளித்தால், அடுத்த நாளே சிக்னல் பவரை உயர்த்துகின்றனர். செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் சிக்னலின் அளவு 600 மில்லி வாட்ஸ் என்று இருக்க வேண்டும். ஆனால், 4,000 மில்லி வாட்ஸ் வரைக்கும் இவர்கள் சிக்னல்களை அதிகப்படுத்தி விடுகிறார்கள்! - இது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த சர்வேயின் சாராம்சம்!.
இது குறித்து 'கிரீன் எர்த்' அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீயிடம் பேசினோம். "செல்போன் டவர் களால்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்ககூடிய கதிர்வீச்சுப் பரவல் என்று உறுதிப்படுத்திக் கூற இதுவரை எந்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அதே நேரம் இதனால் பாதிப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது. இந்தக் கதிர்வீச்சுகளை யாரும் கட்டுப்படுத்துவதாகவோ, கண்காணிப்பதாகவோ தெரிய வில்லை. ஒரு காற்றாலை அமைத்தால்கூட அதைக் கண் காணிக்கும் அரசு, இந்த செல்போன் டவர்களைக் கண்காணிப் பதாகத் தெரியவில்லை!" என்றார் கவலையுடன்.
"செல்போன் டவர் கதிர்வீச்சு தொடர்பாக ஏதேனும் ஆய்வ றிக்கை உள்ளதா?" என்று தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகினோம். நம்மிடம் பேசிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் நலப் பொறியாளர் கார்த்திகேயன், 'கதிர்வீச்சு இரண்டு வகைப் படும். ஆல்ஃபா, பீட்டா, காமா போன்றவை அபாயம் விளைவிக்கும் கதிர்வீச்சுகள். செல்போன்களுக்குப் பயன்படும் ரேடியோ ஃப்ரீக்வன்ஸி, மைக்ரோவேவ் போன்றவை அபாயமற்ற கதிர்வீச்சுகள். இருப்பினும் இந்த சிக்னல்கள் மனிதர்களின் உடலில் உள்ள திசுக்களை வெப்பமடையச் செய்கிறது. ரத்த அணுக்களைத் தாக்குகிறது. நமது தூக்கத்துக்குத் தேவையான மெலடோனின் சுரப்பி, இந்தக் கதிர்வீச்சுகளால் தாக்கப்பட்டு படிப்படியாக பாதிப்பு அடைகிறது.
இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி நிலையம்போன்ற பெரும் நிறுவனங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இவற்றை முறைப் படுத்த வழி வகுக்க வேண்டும். 60 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு ஒரு செல்போன் டவர் மட்டுமே அமைக்க வேண்டும் என்று பன்னாட்டு விதிமுறைகள் (இன்டர்நேஷனல் நான் அயனைஸிங் ரேடியேஷன் ஸ்டாண்டர்டு) கூறுகின்றன. இவற்றைப் பின்பற்றினால், எதிர்காலத்தில் ஏற்படும் அபாய விளைவுகளில் இருந்து நம்மை ஓரளவுக்குத் தற்காத்துக்கொள்ள முடியும். எங்கள் துறை சார்பாக செல்போன் டவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். விரைவில் அரசுக்கு இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறோம்!" என்றார்.
செல்போன் நிறுவனங்களின் செயல்பாடு குறித்துப் பேசும் சிலர், "செல்போன் டவர்களை இயக்க ஒரு நிறுவனத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஒரு டவரில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு 60 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகிறது. அப்படி என்றால், சென்னையில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட செல் போன் டவர்களால் எந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பது புரியும். செல்போன்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் குறைந்த கதிர்வீச்சுத் தன்மைகொண்ட மொபைல்களைத் தயாரிக்கின்றன. இந்தியா என்று வரும்போது, அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இதுவும் பாதிப்புக்கு ஒரு காரணம்!" என்கிறார்கள் விளக்கமாக.
"தமிழகத்தில் ஏர்டெல் நிறுவனம் 10 ஆயிரம் செல்போன் டவர்களைக் கடந்துவிட்டது!" என்று சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தமிழகத்துக்கான அதிகாரி ராஜீவ் ராஜகோபால் சொல்லி இருக்கிறார். அதைவைத்து இதர செல்போன் நிறுவனங்களுக்கு எத்தனை டவர்கள் இருக்கும் என்பதைக் கணக்கிட்டால், மண்டைக்குள் கிர்ர்ரடிக்கிறது. இனியாவது விழித்துக் கொள்ளுமா அரசு?